ஹைதராபாத் டி20 லீக்கில் மேடக் ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மா, 259 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வாரங்கல் வாரியர்ஸுக்கு எதிராக 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 136 ரன்கள் குவித்த அவர், 42 பந்துகளில் சதமடித்து, 12 பவுண்டரி, 7 சிக்சர் அடித்து அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ முதலிய 3 அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய திலக் வர்மா, தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் மாறினார். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக்ரேட் மந்தமாக இருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது.
இலங்கை ஏ அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கூட சூர்யவன்ஷியின் அதிரடியான 94 ரன்கள் ஆட்டத்திற்கு பிறகு மந்தமான ஸ்ட்ரைக்ரேட்டால் திலக் வர்மா பெரிய இலக்கை குறைத்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில் ஹைத்ராபாத் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்ட டி20 லீக்கில் வாரங்கல் வாரியர்ஸுக்கு எதிராக மேடக் ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மா 259 ரன்கள் என்ற இமாலய ரன்சேஸிங்கை சாத்தியப்படுத்தியுள்ளார்.
சேஸிங்கில் ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய திலக் வர்மா, 42 பந்தில் சதமடித்தது மட்டுமில்லாமல் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 136 ரன்கள் அடித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதில் 12 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திலக் வர்மா.