இந்தியா-இலங்கை 2வது டெஸ்டில் 503 ரன்கள் குவித்து இந்தியா வலுவாக இருந்த நிலையில், இலங்கையின் சோனல் தினுஷா இரு இன்னிங்ஸிலும் சதமடித்து போட்டியின் ஓட்டத்தை மாற்றினார். 1வது இன்னிங்ஸில் 103, 2வது இன்னிங்ஸில் 100* ரன்கள் எடுத்து, 29 ஆண்டுக்கு பின் இந்தியாவிற்கு எதிராக ஒரே டெஸ்டில் இரு சதங்கள் அடித்த முதல் இலங்கை வீரராக வரலாறு படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த இந்தியா, இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் அற்புதமான பேட்டிங்கால் வெற்றியை நழுவவிட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 503/9 ரன்கள் குவித்து டிக்ளார் செய்த நிலையில், தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி ஃபால்லோவ் ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவந்த இலங்கை அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 5ஆம் நாள் தொடக்கத்திலேயே இலங்கையை வீழ்த்தி எளிதில் வென்றுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் ‘குறுக்க இந்த கௌசிக் வந்தா’ என்பது போல நடப்பு டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் சிறந்த வீரராக இருந்துவரும் சோனல் தினுஷா, முதல் இன்னிங்ஸ் சதமடித்த கையோடு 2வது இன்னிங்ஸிலும் சதம்விளாசி சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்தியாவிற்கு பெரிய அடியை கொடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தன் மூலம், 29 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள் அடிக்கும் முதல் வீரராக சோனல் சாதனை படைத்துள்ளார். கடைசியாக 1997ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் அரவிந்த டி சில்வா 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்திருந்தார்.
SL vs IND போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதமடித்த இலங்கை வீரர்கள்:
துலீப் மெண்டிஸ் - 105 & 105 - சென்னை - 1982
அரவிந்த டி சில்வா - 146 & 120 - கொழும்பு (SSC) - 1997
சோனல் தினுஷா - 103 & 100* - கொழும்பு (SSC) - 2026