ஒருநாள் போட்டிகளின் ஓவர்களை 40 ஆகக் குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
டி20 கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சியால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களின் சுவாரஸ்யம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளின் ஓவர்களை 40 ஆகக் குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இதுகுறித்து, நிர்வாக அமைப்பு பரிசீலித்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தபோதிலும், ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தின்போது எந்தவொரு முன்மொழிவும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் அவ்வாறு ஓவர்களை குறைக்கக் கூடாது எனக் கூறியிருக்கிறார்.
மேலும், ஒருநாள் போட்டிகளை சுவாரசியமாக்க மூன்று அணிகள் மற்றும் நான்கு அணிகள் பங்கேற்கும் தொடர்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என யோசனையும் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர், “ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாகக் குறைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, மூன்று அல்லது நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர்களை மீண்டும் கொண்டுவர வேண்டும். முன்பெல்லாம் ஆஸ்திரேலியாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து விளையாடிய ட்ரை-சீரிஸ் தொடர்களைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இருதரப்பு தொடர்களைவிட, வெவ்வேறு மைதானங்களில் வெவ்வேறு அணிகளுடன் விளையாடும்போது ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக மாறும். இது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நல்ல சுவாரஸ்யத்தை அளிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.