shreyas - gambhir - rana
shreyas - gambhir - rana web
கிரிக்கெட்

கவுதம் கம்பீரை மதிக்காத KKR அணி? ரானாவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமனம்!

Rishan Vengai

ஒரு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் எதிரணி 190 ரன்களுக்கு மேல் அடித்தபோதும், அதை வெற்றிக்கரமாக துரத்தி கோப்பையை வென்ற ஒரு அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் தான். 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் அதை செய்து காட்டியவர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர் என்ற கேம் அனலைசர் தான். எப்போதும் பாசிட்டிவ் மற்றும் ஃபைட்டிங் கிரிக்கெட் ஆடக்கூடிய கவுதம் கம்பீர் இளம் வீரர்களை ஆதரிக்கக்கூடிய ஒரு கேப்டனாகவே இருந்துள்ளார்.

KKR

ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டார். இந்நிலையில் தற்போது 2024 ஐபிஎல் தொடருக்கு தன்னுடைய பழைய அணியான கொல்கத்தா அணிக்கே திரும்பியிருக்கும் கம்பீர், KKR அணியை ஆலோசகராக இருந்து வழிநடத்தவிருக்கிறார். அவருடைய வருகையை உரிமையாளரான சாருக் கானும், கொல்கத்தா அணி நிர்வாகமும் மகிழ்ச்சியாக வரவேற்றது. ஆனால் அணியின் கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்ற கருத்தில் கவுதம் கம்பீர் நிதிஷ் ரானா பக்கமும், நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயர் பக்கமும் இருப்பதாக தகவல் வெளியானது.

KKR

தொடர்ந்து கவுதம் கம்பீர் கடந்த ஐபிஎல் தொடரில் நன்றாக வழிநடத்திய நிதிஷ் ரானாவின் பக்கமே இருந்ததாகவும், இதனால் கம்பீரின் வருகையால் அணிக்குள் பிரச்னை உருவாகிறது என்றும் சர்ச்சை எழுந்தன. இந்நிலையில் தான் கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயரையே கேப்டனாக நியமித்துள்ளது.

கம்பீரை மதிக்காமல் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக்கிய KKR!

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் காயத்தால் விளையாடாமல் போன ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக நிதிஷ் ரானா கொல்கத்தா அணியை வழிநடத்தினார். நிதிஷ் ரானா தலைமையில் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றியை பதிவுசெய்த கேகேஆர் அணி, ரிங்கு சிங்கின் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் வெற்றியால் அருமையான தொடக்கத்தை பெற்றது. ஆனால் அதற்கு பிறகான 4 தொடர் தோல்வியின் காரணத்தால் அந்த அணியால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை மட்டுமே தக்கவைக்க முடிந்தது.

gambhir - rana

இந்நிலையில், தற்போது முழு உடற்தகுதியுடன் திரும்பி வந்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேப்டன்சியை வழங்க வேண்டுமா? அல்லது நிதிஷ் ரானாவிடமே கேப்டன்சியை வழங்க வேண்டுமா? என்ற குழப்பம் நீடித்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் ஆலோசகராக இணைந்த கவுதம் கம்பீர் நிதிஷ் ரானா பக்கம் நின்றதால் KKR நிர்வாகத்திற்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் விவாதமாக பேசப்பட்டது. இந்நிலையில் கம்பீரின் கருத்தையும் மீறி, தற்போது ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்துள்ளது KKR நிர்வாகம். மேலும் கம்பீரையும் பகைத்துக்கொள்ளாமல் அவருடைய கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நிதிஷ் ரானாவை துணை கேப்டனாக நியமித்துள்ளது.

பிரச்னையை உறுதிசெய்யும் வகையில் பதிவிட்ட கம்பீர்!

கம்பீர் நிதிஷ் ரானாவை தான் ஆதரித்தார் என்பதை உறுதிசெய்யும் வகையில், ஸ்ரேயாஸ் கேப்டனாக அறிவித்ததற்கு பிறகு கவுதம் கம்பீர் பதிவிட்ட எக்ஸ் பதிவு அமைந்துள்ளது.

சமீபத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “ ஸ்ரேயாஸ் மற்றும் நிதிஷ் ரானா இருவருக்கும் வாழ்த்துகள்! கேப்டன்கள் போருக்கு தயாராக உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார். டெல்லி வீரர்களான நிதிஷ் ரானா மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் அதிகமான உள்நாட்டு போட்டிகளில் ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.