IPL தொடரில் கடந்த 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'இம்பாக்ட் பிளேயர்' (Impact Player) விதி, ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு முக்கிய மாற்றமாக உள்ளது. முதல் ஆண்டில் ஐபிஎல் அணிகள் இதனை பெரிதாக பயன்படுத்தாவிட்டாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அனைத்து அணிகளும் இதனை திறமையாக பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்யவந்த போது மும்பை அணி பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரை இம்பாக்ட் வீரராக கொண்டுவந்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துகளை 4 புறமும் சிதறடித்த நிலையில், முக்கிய தருணங்களில் விக்கெட் வீழ்த்தும் ஷர்துல் தாக்கூர் பந்து வீச வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதிவரை ஷர்துல் தாக்கூருக்கு ஒரு ஓவர் கூட மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கொடுக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் பகுதி நேர பந்துவீச்சாளர் வில் ஜாக்ஸ் கூட ஒரு ஓவரை வீசியிருந்தார். அதோடு ஆல் ரௌண்டரான ஹர்திக் பாண்டியா தனது 4 ஓவரையும் வீசியிருந்தார்.
இந்த சூழலில் கூட ஷர்துல் தாக்கூருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் மும்பை நிர்ணயித்த இமாலய இலக்கை ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் எட்டி அபார வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பேட்டிங்,பௌலிங் செய்யாத முதல் வீரர் என்ற சாதனையை ஷர்துல் தாக்கூர் படைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போட்டிக்குப் பிறகு பேசிய மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கெய்ரன் பொல்லார்ட், ஷர்துல் தாக்கூரை ஏன் பந்துவீச அழைக்கவில்லை என்று எனக்கும் சரியாகத் தெரியவில்லை என்றும், இது குறித்து கேப்டனிடம்தான் கேட்க வேண்டும் என்றும் பதிலளித்தார்.