விராட் கோலி pt web
கிரிக்கெட்

நேற்று ரவி சாஸ்திரி.. இன்று ஜான்டி ரோட்ஸ்.. விராட் கோலியை வம்பிழுக்கும் Ex ஜாம்பவான்கள்!

இந்தியாவின் சிறந்த பீல்டர் விராட் கோலி அல்ல என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

Prakash J

‘இந்தியாவின் ரன் மெஷின்’ என அழைக்கப்படும் விராட் கோலி, ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். 50 ஓவர் உலகக் கோப்பையைக் கருத்தில்கொண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார். எனினும், தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்தச் சூழலில், விராட் கோலியின் நடத்தை குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தவறான விமர்சனத்தை வைத்திருந்தார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருந்த ரவிசாஸ்திரி, “திமிர்பிடித்தவர், அடங்காதவர், எல்லாவற்றையும் எல்லை வரை கொண்டு செல்பவர் என்று மைதானத்தில் கோலியைப் பற்றிச் சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால், மைதானத்திற்கு வெளியே அவர் இதற்கு முற்றிலும் நேர் எதிரானவர்” எனத் தெரிவித்திருந்தார். இது, அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

விராட் கோலி

இந்த நிலையில், இந்தியாவின் சிறந்த பீல்டர் விராட் கோலி அல்ல என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளராக நான் கோலியை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். அவர் ஒரு நல்ல ஃபீல்டரே தவிர, இந்தியாவின் மிகச்சிறந்த பீல்டர் கிடையாது. அவரது ஆற்றல் அசாத்தியமானது. ஆனால், எல்லாமே நன்றாகச் செல்லும்போது அவரது அதீத ஆக்ரோஷம் அணிக்கு உதவும். அதேநேரம், அணிக்கு சாதகமில்லாத சூழ்நிலை ஏற்படும்போது அவரது ஆக்ரோஷம் எங்கு போகும்? அது டிரெஸ்ஸிங் ரூமில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கலாம் என்பதுதான் என் கவலை" எனத் தெரிவித்துள்ளார்.