ரோகித் ஷர்மா Pt web
கிரிக்கெட்

Eng. தொடருடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா? முடிவை மாற்றிய பிசிசிஐ?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், பிசிசிஐ ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உண்மை நிலவரம் என்ன? வாருங்கள் இதில் பார்க்கலாம்.

Prakash J

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இதற்கிடையே இந்த தொடரில் இடம்பெற்றுள்ள ரோகித் சர்மா பெரியளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா 11 ரன்களும், இரண்டாவது போட்டியில் 26 ரன்களுமே எடுத்திருந்தார்.

இதனால் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிடலாம் எனத் தகவல்கள் வெளியாகின. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், பிசிசிஐ ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு மறுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடைப்பட்ட காலத்தில் 20 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. அதில், ஜெய்ஸ்வாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை இந்திய அணியில் விளையாட வைக்க இந்திய அணி முன்வந்திருப்பதாகவும் இதுதொடர்பாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்கள் ரோகித்திடம் நீண்ட நேரம் பேசியதாகவும் தகவல் வெளியானது.

Rohit Sharma

ரோகித்தின் ஓய்வு வதந்திகள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவர்மீது அணி நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுவதை இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “ரோஹித் ஷர்மா போன்ற ஒரு பெரிய வீரருக்கு எந்தவிதமான அழுத்தமும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதை உணரும் அளவுக்கு அவர் ஒரு சிறந்த வீரர் அல்ல. ஆம், முதல் இரண்டு போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்கவில்லை, ஆனால் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. லார்ட்ஸில் ரோஹித் ஷர்மாவிடமிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு இன்னிங்ஸைக் காணலாம். ரோஹித் போன்ற ஒரு வீரரிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இன்னிங்ஸை நிச்சயமாகக் காண முடிந்தது, மேலும் இது பல பேட்ஸ்மேன்களுக்கு நடப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனவே, அவர் திணறினார் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.