சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தோல்வி என அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, இந்திய அணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சொந்தமண்ணில் தோல்வியடைந்ததில் வீரர்கள் சரியாக தயாராகவில்லை என்பதே குறையாக சொல்லப்பட்டது.
இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறத் தவறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் முதல் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு மறுப்பு என பல்வேறு கட்டுப்பாடுகளும், நிர்பந்தங்களும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வீரர்களின் ஒழுக்கத்தையும், அணியின் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் ரஞ்சிக்கோப்பை போட்டிக்கு திரும்பின. இதை கேப்டன் ரோகித் சர்மா முன்னிருந்து, இளம் வீரர்களும் பங்கேற்கும் வகையில் மும்பை அணிக்காக களம்கண்டார்.
இன்று தொடங்கிய ரஞ்சி போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் என அனைவரும் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அணியில் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் பங்கேற்று விளையாடினர். ஒரு மோசமான தொடருக்கு பின்வரும் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது ரோகித் சர்மா 3 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறி ஏமாற்றமளித்தனர். இவர்களின் மோசமான பேட்டிங்கால் மும்பை அணி 120 ரன்னுக்கு சுருண்டது.
கர்நாடகா அணிக்கு எதிரான பஞ்சாப் அணியில் பங்கேற்ற துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் வெளியேறினார். கில் தலைமையிலான பஞ்சாப் அணி 55 ரன்னுக்கு சுருண்டது.
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான டெல்லி அணியில் பங்கேற்ற விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 1ரன்னுக்கு வெளியேறினார். அவர்களின் அணி 188 ரன்களே சேர்த்தது.