14 வயதில் உலக கிரிக்கெட்டையே மிரட்டிவருகிறார் குட்டி ராட்சசன் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது முதலே, ’யார்ரா இந்த பையன்’ என்ற Mode-ல் தான் தற்போதுவரை பிரம்மிப்பை கொடுத்துவருகிறார் வைபவ்.
14 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டது முதல் இளம் வயதில் டி20 சதமடித்த வீரராக வரலாறு படைத்தது வரை ஆச்சரியத்தின் மறுஉருவமாகவே வலம்வருகிறார் இந்தியாவின் சூர்யவன்ஷி.
யூத் கிரிக்கெட்டில் பல்வேறு வரலாற்று சாதனைகளை குவித்துவரும் இவரின் மிரட்டலான ஆட்டத்தை பார்த்த பல ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள், ’This Guy is Unreal’ என்றே ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் 2026 யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்தில் 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் உட்பட 175 ரன்கள் குவித்து மிரட்டியிருக்கும் சூர்யவன்ஷி, யு19 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்த வீரராகவும், யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராகவும் மாறி சரித்திரத்தை தன் பெயரில் எழுதியுள்ளார்.
உலகமே 14 வயது சிறுவனின் கிரிக்கெட் திறமையை பார்த்து உச்சிமுகர்ந்துவரும் நிலையில், யார் இந்த சூர்யவன்ஷி..? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்..
2011ஆம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி, தன்னுடைய கிரிக்கெட்டை மிகவும் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டார். இந்திய கிரிக்கெட் வீரர்களால் பெரிதும் மதிக்கப்படும் ரஞ்சிக்கோப்பை தொடரில் வெறும் 12 வயதில் அறிமுகத்தை பெற்ற சூர்யவன்ஷி, அங்கு பீகாருக்காக விளையாடினார்.
ஐபிஎல் ஏலத்தில் 13 வயதில் மிகவும் இளம் வீரராக பதிவுசெய்யப்பட்ட சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.10 கோடிக்கு விலைக்கு வாங்கியபோது தான், யார்ரா இந்த பையன்? என கிரிக்கெட் ரசிகர்களே அவரை வியந்து பார்த்தனர்.
ஆனால் 'இளம் கிரிக்கெட் மேதையான’ சூர்யவன்ஷியின் திறமையை 11 வயது இருந்தபோதே கண்டுபிடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியி ஸ்கவுட்டிங் டீம் தான். அதிலும் அவரிடம் ஏதோ இருக்கிறது என்று முதலில் நம்பிக்கை வைத்தவர் இலங்கையின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் குமார் சங்ககரா. அதிக வயது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய ஹிட்டிங் திறமை மற்றும் கிரிக்கெட் நுட்பம் போன்றவை குமார் சங்ககராவை ஈர்த்துள்ளது. அதற்குபின் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியின் கீழ் பட்டைத்தீட்டப்பட்டார் சூர்யவன்ஷி.
ஐபிஎல் போட்டியில் 14 வயதில் களமிறங்கிய வைபவ், 35 பந்தில் டி20 சதமடித்து இளம் வயது டி20 centurionஆக வரலாறு படைத்தார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான யு19 டெஸ்ட் போட்டியில் 58 பந்தில் சதமடித்த அவர், யு-19 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும், அதிவேகமாக டெஸ்ட் சதமடித்த இந்திய யு-19 வீரர் மற்றும் உலகளவில் அதிவேகமாக டெஸ்ட் சதமடித்த இரண்டாவது யு-19 வீரர் என்ற சாதனையையும் குவித்து அசத்தினார்.
ஆனால் அதற்கு முன்பே தன்னுடைய நம்ப முடியாத திறமையால் ஜொலித்த வைபவ், ரஞ்சி டிராபி, ஹேமந்த் டிராபி, கூச் பெஹர் டிராபி மற்றும் வினு மங்கட் டிராபி என பல Tournament-களில் விளையாடி, ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்தில் மட்டும் 49 சதங்கள் அடித்து எல்லோரையும் பிரம்மிக்க வைத்துள்ளார்.
தொடர்ந்து தன்னுடைய அபாரமான பேட்டிங்கால் திணறடித்து வரும் சூர்யவன்ஷி, யூத் ஒருநாள் போட்டிகளில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரராகவும், ஒரே இன்னிங்ஸில் 15 சிக்சர்கள் அடித்த முதல் வீரராகவும், யூத் ஒருநாள் போட்டியில் 52 பந்தில் அதிவேகமாக சதமடித்த வீரராகவும் பல உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். மொத்தமாக யூத் ODI கிரிக்கெட்டில் 110 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார் சூர்யவன்ஷி, அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் வெறும் 55 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். அதாவாது இரண்டு மடங்கு சிக்சர்களை சூர்யவன்ஷி அடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த குறிப்பிடத்தக்க வரலாற்று தொடக்கமானது, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் போன்ற இந்திய ஜாம்பவான்களின் முந்தைய சாதனைகளை முறியடிக்க அவரை அனுமதித்துள்ளது. சூர்யவன்ஷியின் 175 ரன்கள் ஆட்டத்தால் இந்தியா 6வது முறையாக யு19 உலகக்கோப்பையை வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளது.