ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஷித் கான், இந்தியா உட்பட இரண்டு நாடுகள் தன்னை அணுகி, குடியுரிமை மற்றும் அவர்களுக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கியதாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்திருப்பது உலகில் பேசுபொருளாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஷித் கானின் சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியாக இருக்கிறது. 'ரஷீத் கான்: தெருக்களிலிருந்து நட்சத்திர அந்தஸ்து வரை' என்ற அந்தப் புத்தகத்தில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நங்கர்ஹாரின் புழுதி படிந்த தெருக்களில் ஆரம்பித்த அவரது பயணம் முதல் உலகின் டி20 வீரராக உருவெடுத்தது வரை பிரதிபலித்துள்ளது. அதில், ”ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் எனக்கு குடியுரிமை மற்றும் விளையாடும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் அவர்களிடம், 'நான் என் நாட்டிற்காக விளையாடவில்லை என்றால், வேறு எந்த நாட்டிற்காகவும் விளையாட மாட்டேன்' என்று கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை குறித்து அவர் விரிவாகக் கூறவில்லை என்றாலும், இந்திய அரசின் வாய்ப்பை ரஷீத் விரிவாகக் கூறியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர், இதுகுறித்து பேசியதாக ரஷித் தெரிவித்துள்ளார். ’தங்கள் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதனால் இந்தியாவில் வந்து தங்கி, கிரிக்கெட் விளையாடுங்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம்’ என இந்திய அதிகாரி சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு தாம் ஆச்சரியப்பட்டதாகவும், அதற்கு எப்படிப் பதிலளிப்பது என்று தனக்குத் தெரியாமல் புன்னகைத்து ‘நன்றி’ தெரிவித்ததாகவும் ரஷீத் தெரிவித்துள்ளார்.