ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.
அதன்படி, நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 42-வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங்க் செய்த பெங்களூர் அணி 19.2 ஓவர்களிகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்ததன் மூலம் வெற்றி பெற்றது.
முன்னதாக, பெங்களூரு அணியின் பேட்டிங்கின்போது, 8-வது ஓவரில் அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் அடித்த பந்தை டீப் பேக்வார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஜேசன் ஹோல்டர் டைவ் அடித்துப் பிடித்தார். இதில், பந்து தரையில் பட்டது போலத் தோன்றினாலும், மூன்றாவது நடுவரும் தனது அவுட் எனவே கூறினார். இந்த சூழலில் தான், ஹோல்டர் பிடித்த கேட்ச் முறையான அவுட் தானா? என கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது, மைதானத்தில் இருந்த நான்காவது நடுவரிடம் விராட் கோலி, வாக்குவாதத்தில் ஈடுபட்டது கூட பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
இறுதியில், ஹோல்டர் பிடித்த கேட்ச் அவுட் எனவே கொடுக்கப்பட்டிருந்தாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் தான், முன்னாள் நடுவர் அனில் சௌத்ரி இந்த கேட்ச் குறித்து விவாதத்தை தூண்டும் கருத்து ஒன்றை தற்போது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், நீங்கள் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, கேட்சைக் கட்டுப்படுத்தும் விதம், இரண்டாவது, உடல் அசைவு. ஹோல்டர் தன் உடலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பே, அவரது உள்ளங்கை கீழ்நோக்கிச் சென்றதால், பந்து தரையைத் தொட்டது. அது அவுட் இல்லை என்றே நான் நினைக்கிறேன். மூன்றாவது நடுவர் என்ன பார்த்தார் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.