rcb fans celebration web
கிரிக்கெட்

எல்லை மீறிய RCB ரசிகர்கள்.. வெற்றி கொண்டாட்டத்தில் போலீஸ் தடியடி! #Watch

2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத்தை தோற்கடித்து கோப்பை வென்ற ஆர்சிபி அணி தொடர்ந்து 2வது கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

PT WEB

IPL 2026 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள RCB ரசிகர்கள் நள்ளிரவில் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான RCB-யின் இந்த வரலாற்று வெற்றியை, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து விடிய விடியக் கொண்டாடினர்.

rcb 2026

இருப்பினும், இந்த அசாத்திய மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கு இடையே பல நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு மீறல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பல்வேறு வீடியோக்களில், RCB ரசிகர்கள் பெருந்திரளாகக் கூடி சாலைகளை முழுமையாக முடக்கி, பொதுப் போக்குவரத்திற்குப் பெரும் முட்டுக்கட்டை போட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத்தில் ரசிகர்கள் எல்லையற்ற உற்சாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தபோது, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்குள்ள போலீஸார் தடியடி கொண்டு கூட்டத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, "ரசிகர்களின் கொண்டாட்டம் நியாயமானது என்றாலும், பொதுப் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் கொண்டாட பழக வேண்டும்" என நெட்டிசன்கள் பலரும் தங்களது மாறுபட்ட கருத்துகளைப் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

IPL 2026 இறுதிப் போட்டியில் RCB அணி வரலாற்றுச் சாதனையுடன் கோப்பையைக் கைப்பற்றி மாஸ் காட்டியுள்ள நிலையில், இந்த சீசன் முழுவதும் தனது பயமற்ற, அதிரடியான அட்டாக்கிங் பேட்டிங் ஸ்டைலால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்தது.

கடந்த 2025-ஆம் ஆண்டு RCB தனது முதல் கோப்பையை வென்ற போது, நடந்த கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.