2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அரையிறுதிப்போட்டிகளை எட்டிய நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.
துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. நல்ல பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
வில் யங் 21 ரன்னில் வெளியேற, கேன் வில்லியம்சன் உடன் கைக்கோர்த்த ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 5வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
108 ரன்னில் ரச்சின் ரவீந்திரா வெளியேற, மறுமுனையில் ரச்சின் விட்ட இடத்திலிருந்து வெளுத்துவாங்கிய கேன் வில்லியம்சன் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசி சதமடித்து அசத்தினார்.
கேன் வில்லியம்சனும் 102 ரன்னில் வெளியேற கடைசியாக வந்து சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 49 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 49* ரன்கள் என அடித்து அசத்த 50 ஓவரில் 362 ரன்களை குவித்து வரலாறு படைத்தது நியூசிலாந்து அணி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 50 ஓவரில் 362/6 ரன்கள் குவித்த நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்து வரலாறு படைத்தது.
இதே நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிராக 356 ரன்கள் அடித்திருந்த ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்துள்ளது நியூசிலாந்து.