17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே, வீரர்கள் தேர்வு மாற்றம், இந்திய ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, ரூ.15 கோடிக்கு மீண்டும் மும்பை அணிக்கு அழைத்து வரப்பட்டார். இது, பல கேள்விகளையும், விமர்சனங்களையும் எழவைத்தது. தவிர, அவர் அழைத்து வரப்பட்ட சில நாட்களிலேயே அந்த அணியின் கேப்டனாகவும் ஆக்கப்பட்டார்.
ஹர்திக் பாண்டியாவிற்கு மும்பை அணியில் கேப்டன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மும்பை இந்தியன்ஸ் அணி, ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா தலைமையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்திருந்த நிலையில், அவர் இருக்கும்போதே ஹர்திக்கை அணி நிர்வாகம் கேப்டனாக்கியது விவாதமாக மாறியது.
இதன் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக வலைதளங்களில் பின்தொடர்வதை நிறுத்துவது என தொடங்கி, அவ்வணி ஜெர்சியை எரிக்கும் அளவிற்குச் தீவிரம் சென்றது. தவிர, ரோகித் ஆதரவு வீரர்களும், மும்பைக்கு எதிராகப் பதிவிடும் அளவுக்குச் சென்றது. மேலும், ரோகித் சர்மா ஆதரவு வீரர்கள்கூட, மும்பை அணியில் இருந்து வெளியேறுகிறார்கள் என்றுகூட தகவல்கள் வந்தன.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மும்பை அணி நிர்வாகமோ அல்லது ஹர்திக் பாண்டியாவோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும், அவர் விலக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. ஒருவேளை, ஹர்திக் பாண்டியா விலகும்பட்சத்தில், கேப்டனாக ரோகித்தே மீண்டும் தொடருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 உலகக்கோப்பை தொடரின்போது கணுக்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. அவர் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் தொடரின்போது அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் அந்த தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் ஆடுவதே சந்தேகம் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி போட்டுவைத்த மொத்த திட்டத்துக்கும் ஹர்திக், வேட்டு வைத்திருப்பதாகவும், இதற்கு அவர் குஜராத் அணியிலேயே இருந்திருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மகளின் நோட் பேப்பரில் ராஜினாமா எழுதி அனுப்பிய உயர் அதிகாரி... வைரலாகும் புகைப்படம்!