ரொனால்டோ x page
கிரிக்கெட்

போர் பதற்றம் | சவூதியைவிட்டு ரூ.750 கோடி ஜெட்டில் பறந்த ரொனால்டோ?

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பாதுகாப்பு காரணங்களுக்காக சவுதி அரேபியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பாதுகாப்பு காரணங்களுக்காக சவுதி அரேபியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர்: விக்கி

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பிரபல கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தனது குடும்பத்துடன் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ரொனால்டோ தனது தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் ரியாதில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிட் நகருக்குச் சென்றதாக தெரிகிறது. சுமார் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தில் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறியதாக தகவல் கூறுகிறது. Flightradar24 தரவுகளின்படி, அவரது விமானம் ரியாத்திலிருந்து கிளம்பி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் (Madrid) நகருக்குச் சென்றுள்ளது. இருப்பினும், ரொனால்டோ அந்த விமானத்தில் இருந்தாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளிவரவில்லை.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, ஆசிய சாம்பியன்ஸ் லீக் (AFC Champions League) போட்டிகள் உட்பட பல விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ரொனால்டோவின் அல்-நாசர் (Al Nassr) அணியின் போட்டிகளும் இதில் அடங்கும். ரியாத்தில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். ரொனால்டோ சமீபத்தில் அல்-ஃபயஹா (Al-Fayha) அணிக்கு எதிரான போட்டியின்போது தசை காயத்தால் (muscle injury) பாதிக்கப்பட்டார். இதனால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. இந்த நிலையில் அவர் சவுதியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம், ரொனால்டோ தற்போது அல் நாசர் (Al-Nassr) பயிற்சி மைதானத்தில் தசைப்பிடிப்பு காயத்திற்காக சிகிச்சை பெற்று வருவதாக அதாவது இன்னும் அவர் சவூதி அரேபியாவில்தான் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.