Hoysala
Hoysala ட்விட்டர்
கிரிக்கெட்

மைதானத்தில் மயங்கி விழுந்த கர்நாடக கிரிக்கெட் வீரர்: மாரடைப்பால் மரணம்!

Prakash J

ஏஜிஸ் தென் மண்டல கிரிக்கெட் (Aegis South Zone tournament) போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு - கர்நாடக அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் கர்நாடக அணி வெற்றிபெற்றது. இந்த அணியின் நடுவரிசை பேட்டராகவும், பந்துவீச்சாளராகவும் விளையாண்டவர் ஹொய்சலா. இந்த நிலையில், நேற்று தமிழ்நாடு அணியை வீழ்த்திய பிறகு, தனது அணி வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காக ஹொய்சலா செல்லவிருந்தபோது திடீரென மைதானத்தில் மயங்கி கீழே விழுந்திருக்கிறார். உடனே அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு அவசர சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

பிறகு அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 34 வயதான ஹொய்சலா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹொய்சலா, 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கர்நாடகா அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் அவர் கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் ஷிவமொக்கா லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக மாரடைப்பால் இளைஞர்கள் பலர் உயிரிழந்தது வருவது அதிகரித்து வருகிறது.