ind vs sa x page
கிரிக்கெட்

INDVSA Test| 201 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா.. 6 விக்கெட்களை சாய்த்த மார்கோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Prakash J

குவஹாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மார்கோ ஜேன்சன் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை திணற வைத்தார். தென்னாப்பிரிக்கா 314 ரன்கள் முன்னிலையில் உள்ளது, மேலும் 2வது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்களை அடிக்கமுடியாமல் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி தொடரை வெல்லும் நோக்கில் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. குவஹாத்தியில் தொடங்கி நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, சேனுரான் முத்துசாமியின் 109 ரன்கள் மற்றும் மார்கோ ஜேன்சனின் 93 ரன்கள் ஆட்டத்தால் 489 ரன்கள் குவித்தது.

மார்கோ ஜேன்சன்

இந்த நிலையில் 3வது நாளில் தங்களுடைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். பேட்டிங்கில் மிரட்டியது போன்று பந்துவீச்சிலும் மார்கோ ஜேன்சன் மிரட்டினார். அவர், இந்திய அணியின் 6 விக்கெட்களை சாய்த்தார். ஹார்மர் 3 விக்கெட்களை எடுத்தார். 3வது நாள் ஆட்டம் நிறைவுற்ற நிலையில், தென்னாப்பிரிக்க அணி 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் ரியான் ரிக்கில்டன் 13 ரன்களுடனும், ஆண்டன் மார்க் ராம் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை காலை நான்காவது நாள் ஆட்டம் தொடங்கும்.