இர்பான் பதான், சிஎஸ்கே எக்ஸ் தளம்
கிரிக்கெட்

2026 IPL.. ”காணாம போயிடுவீங்க..” CSK வீரர்களை விமர்சித்த இர்பான் பதான்?

ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Prakash J

2026 ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் வந்த பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவரையும் தலா 14.2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அவர்களை மையமாக வைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

19ஆவது ஐபிஎல் சீசன், மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் சில அணிகளில் இருந்து 9 வீரர்கள் விலகியிருப்பது அணிக்குப் பாதகமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே அணிகள் குறித்தும், வீரர்கள் குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், ஐபிஎல் மூலம் பல வீரர்கள் சர்வதேச அளவில் புகழ்பெறத் தொடங்குகிறார்கள். தவிர, அவர்கள் பெறும் தொகை மூலம் செல்வந்தவர்களாவதும் உண்டு. காரணம், அந்த அளவுக்கு வீரரின் திறமை மீது நம்பிக்கை வைத்து கோடி ரூபாய் வரை ஏலம் எடுக்கப்படுகிறது. பின்னர், அதே தொகை, அவர்களை போட்டியின்போதும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

irfan pathan

இந்த நிலையில், அவர்கள் தொடரில் சிறப்பாகச் செயல்படாவிட்டால், காணாமல் போய்விடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”களத்தில் அழுத்தத்தை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதே மிகப்பெரிய விஷயம். ஐபிஎல் தொடர் என்பது ஒருநாள் உங்களை ஹீரோவாக்கும், மறுநாளே உங்களை காணாமல் போகச் செய்துவிடும். ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து வாங்கப்படும் வீரர்கள், அடுத்த சீசனில் மோசமாக விளையாடி, பின்னர் எந்த அணியாலும் கண்டுகொள்ளப்படாமல் போவதை நாம் நிறைய பார்த்துள்ளோம். ஒரு வீரர் மீது இவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சில போட்டிகளில் சொதப்பினால் என்ன நடக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அந்தச் சரிவிலிருந்து அவர் தன்னை எப்படி மீண்டும் தயார்படுத்திக் கொண்டு, நம்பிக்கையுடன் களத்திற்கு வருகிறார் என்பதே அவரது உண்மையான திறமையைக் காட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

csk

2026 ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் வந்த பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவரையும் தலா 14.2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அதேபோல் உள்ளூர் இளம் வீரர்கள் ஆக்கிப் நபி தார் 8.4 கோடிக்கும், மங்கேஷ் யாதவ் 5.2 கோடிக்கும் விலைபோனது குறிப்பிடத்தக்கது. அவர்களை மனதில்வைத்தே இர்பான் பதான், இப்படிச் சொல்லியிருப்பதாக சென்னை ரசிகர்கள் கருதுகின்றனர்.