மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
அதற்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
சண்டிகரில் தொடங்கிய முதல் போட்டியில் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ப்ரதிகா ரவல் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கே 114 ரன்கள் குவித்தனர்.
ப்ரதிகா 64 ரன்களும், மந்தனா 58 ரன்களும் அடித்து அசத்த 3வது வீரராக களமிறங்கிய ஹர்லீனும் 54 ரன்கள் அடித்து மிரட்டினார். ஆனால் அவர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில், 300 ரன்களை கடக்க இருந்த வாய்ப்பு தவறிப்போனது. 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி.
282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 44.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய லிட்ச்பீல்ட் 88 ரன்களும், மூனி 77 ரன்களும், சதர்லேண்ட் 54 ரன்களும் அடித்து அசத்தினார்.
இதில் சோகம் என்னவென்றால் இந்திய வீரர்கள் முக்கியமான நேரத்தில் கைக்குவந்த 4 கேட்ச்களை கோட்டைவிட்டு மோசமாக செயல்பட்டனர். இந்தமுறை 2025 ஒருநாள் உலகக்கோப்பை இந்தியா-இலங்கையில் நடப்பதால் இந்திய மகளிர் அணி முதல் உலகக்கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும் நிலையில், இந்திய வீரர்களின் செயல்பாடுகள் விமர்சனத்தை பெற்றுள்ளன.