மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால் twitter
கிரிக்கெட்

விமானப் பயணத்தில் திடீர் உடல்நிலை பாதிப்பு: ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்!

Prakash J

இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணி கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், திரிபுரா அணியுடன் வெற்றிபெற்ற பிறகு, தன் அணியினருடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல இன்று விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அவருக்குத் திடீரென தொண்டையில் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் 2 முறை வாந்தி எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, மயங்க் அகர்வால் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, அவசரமாக, அகர்தலாவில் உள்ள ஐ.எல்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அகர்வால் வாந்தி எடுத்ததால் அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. விமானப் பயணத்தின்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவர் அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் ஷவீர் தாராபூர், “அவரது உடல்நிலை குறித்து கூடுதல் தகவல்களைப் பெற மாநில சங்கம் முயற்சித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

"மயங்க் அகர்வால் அகர்தலாவில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவரது திடீர் உடல்நலக்குறைவுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை" என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.