manav suthar bcci
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்| 10 விக்கெட்டுகளை அள்ளிய மனவ் சுதர்.. இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது.

Rishan Vengai

காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா, முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்து, இலங்கையை அழுத்தத்தில் தள்ளியது. இலங்கை சோனல்-டிக்வெல்லா ஜோடி மூலம் 284 ரன்கள் எடுத்தாலும், இந்தியா 178 ரன்கள் முன்னிலை பெற்றது. 372 ரன்கள் இலக்காக வைத்த இந்தியா, மனவ் சுதரின் 10 விக்கெட் மாயாஜாலத்தால் இலங்கையை 206 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 90 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, சோனல் மற்றும் டிக்வெல்லாவின் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் உதவியால் 284 ரன்கள் சேர்த்தது.

முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள் முன்னிலைபெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கே ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணி வெற்றிபெற 372 ரன்களை துரத்த வேண்டியிருந்தது.

இந்நிலையில் கடைசிநாளான இன்று நடைபெற்றுவரும் போட்டியில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தபிறகான இலங்கை அணியை சோனல் மற்றும் டி சில்வா ஜோடி காப்பாற்றி அழைத்துவந்தது. சோனல் மற்றும் டி சில்வா இருவரும் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்திய நிலையில், இந்தஜோடியை பிரிக்க இந்தியா போராடியது. ஆனால் டி சில்வாவை 59 ரன்களுக்கு ஜடேஜா அவுட்டாக்கி அந்த விக்கெட்டை எடுத்துவந்தார்.

அதற்குபிறகு அழுத்தம் அதிகமாக சிறப்பாக விளையாடிய சோனல் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக 206 ரன்களில் ஆல் அவுட்டான இலங்கை அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சிறப்பாக பந்துவீசிய மனவ் சுதர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மொத்தமாக இந்தப்போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் மனவ் சுதர்.