icc, bcb x page
கிரிக்கெட்

T20 WC | தொடரிலிருந்து விலகிய வங்கதேசம்.. புதிய லீக் தொடக்கம்.. நடவடிக்கை எடுக்காத ஐசிசி!

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையேயான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

Prakash J

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையேயான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. மறுபுறம், வங்கதேச கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஐசிசி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறிய நாடுகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்தது. இதற்கிடையே, வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்தது. இந்தச் சூழ்நிலையில் ஐசிசி, பாகிஸ்தான், வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

icc, bcb

இதில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அது வைத்த கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்தது. மறுபுறம், பாதுகாப்பு காரணங்களால் வங்கதேச அணி இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அந்த நாட்டின் 200 மில்லியன் ரசிகர்களையும் கிரிக்கெட் சந்தையையும் கருத்தில் கொண்டு, வங்கதேச கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஐசிசி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளது. அதேசமயம், கிரிக்கெட் விளையாட்டின் நலன் மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்கும் வகையில், அனைத்து நாடுகளும் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்து, இந்த உலகக் கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்த இரு தரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன. அதே நேரத்தில் உலகக் கோப்பையைத் தவறவிடும்போது தங்கள் வீரர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஓடோமோ டி20 கோப்பை என்ற புதிய லீக்கைத் தொடங்கியது. மேலும், எதிர்கால புரிதலின் ஒரு பகுதியாக, 2031ஆம் ஆண்டு ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக, 2028 மற்றும் 2031க்கு இடையில் பங்களாதேஷ் ஒரு ஐ.சி.சி நிகழ்வை நடத்தும் என கூறப்பட்டுள்ளது.