2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்துக்கும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே திடீரென உரசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்தார். இதனால் ஸ்ரீசாந்த் அழுத காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்களையே கலங்க வைத்தது. இதனையடுத்து அந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசியிருந்த ஸ்ரீசாந்த், “அந்த சம்பவம் நடந்தபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். வலியால் நான் அழவில்லை, ஆனால் மனதால் அழுதேன். அவர் அப்படி செய்வார் என்ற உண்மையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, அதற்குமுன் ஹர்பஜன் உடன் தனக்கு இருந்த உறவின் காரணமாகவும், அன்பின் காரணமுமாகவுமே அழுததாகத் தெரிவித்திருந்தார். வேறொரு நேர்காணலில், அந்த சம்பவத்திற்குப் பின் இருவரும் அந்த சம்பவத்தை மறந்துவிட்டதாகவும், அந்த சம்பவத்திற்காக ஹர்பஜன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஐபிஎல் நிர்வாகத்திடம் கெஞ்சியதாகவும் ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் அந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார் ஹர்பஜன் சிங். அஸ்வின் உடனான யூடியூப் உரையாடலில் இதுகுறித்து வேதனை பொங்க சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறார். அதில், “என் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டும் என்றால், அது ஸ்ரீசாந்துடன் நடந்த சண்டைதான். பல ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது – நான் ஸ்ரீசாந்தின் மகளிடம் மிகவும் அன்போடு பேசிக்கொண்டிருந்தபோது, அவள் ‘நான் உங்களுடன் பேச விரும்பவில்லை. நீங்கள்தான் என் அப்பாவை அடித்தீர்கள்’ என்றாள். அந்த வார்த்தைகள் என் மனதை நொறுக்கின. நான் கண்ணீரை அடக்க முடியாத நிலைக்குச் சென்றேன்.
என் மீதான அவளது அபிப்பிராயம் என்னவாக இருக்கும் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவள் என்னை ஒரு கெட்ட மனிதனாகவே பார்க்கிறாளோ? ‘என் அப்பாவை அடித்தவன்’ என்றே நினைக்கிறாளோ? நான் அவ்வளவு மோசமாக உணர்ந்தேன். இன்று வரை, நானே எதையும் சரிசெய்ய முடியாமல் இருப்பதற்காக அவளிடம் மனமாற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அவள் வளர்ந்தபின் என்னை அதே பார்வையில் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் அவளுடைய அங்கிள் (ஹர்பஜன்) எப்போதும் அவளுடன் இருப்பார் என்றும், அவரால் முடிந்த எந்த விதமான ஆதரவையும் நீட்டுவார் என்றும் அவள் நினைக்க வேண்டும். அதனால்தான் நான் அந்த அத்தியாயத்தை நீக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.