2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெல்லும் வாய்ப்பு அதிகம் என தோனி கூறியுள்ளார். இந்திய அணியின் தற்போதைய நிலை மிகவும் வலிமையானது, சூர்யகுமார் யாதவின் தலைமையில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால், பனி போன்ற சூழ்நிலைகள் அணியின் வெற்றியை பாதிக்கக்கூடும் என அவர் கவலை தெரிவித்தார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் 2 நாட்களே மீதமிருக்கும் நிலையில், 20 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 59 டி20 போட்டிகளில் வென்றிருக்கும் இந்திய அணி 51 வெற்றிகள், 8 தோல்விகளுடன் வலிமையாக வருகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிநாடு என அனைத்து டி20 தொடர்களிலும் தோல்வியே இல்லாமல் வெற்றிநடை போட்டுவரும் இந்திய அணியில், சிக்ஸ் ஹிட்டர்கள், ஃபினிசிங் வீரர்கள், தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் என அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பிட்டு சொல்லும்படியான குறைகள் என இந்திய அணியில் எதுவும் இல்லாமல் இருந்துவருகிறது, ஒரே கவலையாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இருந்த நிலையில், தற்போது அவரும் அவருடைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் எல்லாமே இந்திய அணியே கோப்பை வெல்லும் என்ற ஆருடத்தை வழங்கும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா கோப்பை வெல்லுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மகேந்திர சிங் தோனி இடம், 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெல்லும் என்று நினைக்கிறீர்களா? என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தோனி, “இது ஒரு சார்பான பதில் இல்லை, ஆனால் இதுவரை இருந்த இந்திய அணிகளிலேயே மிகவும் ஆபத்தான அணியாக தற்போதை டி20 உலகக்கோப்பை அணி விளங்குகிறது. ஒரு டி20 அணியில் என்ன தேவையோ அது எல்லாமே தற்போதைய அணியில் இருக்கிறது. அவர்களிடம் நல்ல அனுபவம் இருக்கிறது, அழுத்தமான நேரங்களில் அவர்களுடைய அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
ஆனால் என்னுடைய ஒரே கவலையாக பனி இருக்கும், பனி எனக்கு பிடிக்காத ஒன்று. ஏனென்றால் அது உங்களுடைய பிளான் அனைத்தையும் மாற்றிவிடும். ஒரு நாள் உங்களுடைய பேட்ஸ்மேனுக்கு அரைநாளாக இருந்து, எதிரணி வீரருக்கு சிறப்பான நாளாக இருந்தால், அப்போது பனியும் ஒரு காரணியாக இருந்தால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். அது லீக் போட்டியாகவோ அல்லது நாக் அவுட் போட்டியாகவோ கூட இருக்கலாம். அப்போது தான் நமக்கு பிரார்த்தனை தேவையாக இருக்கிறது. ஆனால் எப்படி இருந்தாலும் தற்போதைய இந்திய அணி மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்று, இந்தியா நிச்சயம் வரலாறு படைக்கும்” என தோனி பேசியுள்ளார்.