தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிஃபையர் 2 போட்டியில் கோவை கிங்ஸ் பந்துவீச்சாளர் தீபன் லிங்கேஷ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார். சமிந்தா வாஸ் பிறகு, இன்னிங்ஸின் தொடக்க மூன்று பந்துகளில் ஹாட்ரிக் எடுத்த உலகின் இரண்டாவது பவுலராக தமிழக வீரர் பெயர் பதித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டோ, பிரான்சைஸ் கிரிக்கெட்டோ முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் பந்துவீச்சாளரின் தீராத கனவாகும். போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்துவது ஒரு அற்புதம் என்றால், முதல் ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது வரலாற்றின் பொக்கிஷமாகும்.
இந்திய ரசிகர்களுக்கு முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் என்று சொன்னாலே நியாபகத்திற்கு வரும் பெயர் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் பெயர்-தான். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் அவர் வீழ்த்திய ஹாட்ரிக்கானது காலத்திற்கும் அழியாத சாதனையாகும். ஆனால் அவர் வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட்டுகளானது ஓவரின் கடைசி 3 பந்துகளிலேயே வந்திருந்தன. ஆனால் இம்முறை போட்டியின் முதல் ஓவரின் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருக்கும் தமிழகத்தைச்சேர்ந்த தீபன் லிங்கேஷ் ஒரு அரிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை இதற்குமுன்னர் ஒரே ஒரு வீரரிடம் மட்டுமே இருந்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியானது கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையே 26ஆம் தேதி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய திருச்சி அணிக்கு பேரதிர்ச்சி கொடுத்த தீபன் லிங்கேஷ், ஒரு அற்புதமான ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி, திருச்சியின் டாப் ஆர்டரைச் சிதைத்தார். நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இது முதல் ஹாட்ரிக் ஆகும்.
கோவை கிங்ஸ் அணிக்காக முதல் ஓவரை வீசிய தீபன் லிங்கேஷ், தனது முதல் பந்திலேயே திருச்சி தொடக்க ஆட்டக்காரர் கே. ராஜ்குமாரை டக் அவுட் ஆக்கினார். அடுத்த பந்தில், திருச்சியின் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேனான ஷ்யாம் சுந்தரை முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைத்தார். அதன்பின்னர், ஒரு அபாயகரமான இன்-ஸ்விங்கர் பந்தை வீசிய தீபன், ஜெகதீஷன் கௌசிக்கின் மிடில் ஸ்டம்பை தகர்த்தெறிந்து தனது ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார். இதன் மூலம், ஒரு இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் எடுத்த அரிய சாதனையை லிங்கேஷ் நிகழ்த்தினார்.
இதற்கு முன்பு ஒரு போட்டியின் முதல் ஓவரின் முதல் 3 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பவுலராக இலங்கையின் சமிந்தா வாஸ் மட்டுமே இருந்தார். 2003 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக இன்னிங்ஸின் முதல் 3 பந்திலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் அரிதான உலகசாதனையை படைத்தார். அவருக்கு பிறகு 23 ஆண்டுகளுக்கு பின் இச்சாதனை ஒரு தமிழக வீரர் தீபன் லிங்கேஷால் படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த அரிதான சாதனையை படைத்த 2வது உலக வீரராக சாதனை படைத்துள்ளார் தீபன் லிங்கேஷ்.
டெஸ்ட் கிரிக்கெட், பிரான்சைஸ் கிரிக்கெட்டில் பல வீரர்கள் முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும் அது ஹாட்ரிக்காகவோ, முதல் 3 பந்தில் வீழ்த்தப்படதாகவே இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சமிந்தா வாஷின் உலகசாதனை முறியடிக்கப்படாமல் தொடர்கிறது.