ஐஎஸ்பிஎல், சூர்யா
ஐஎஸ்பிஎல், சூர்யா புதிய தலைமுறை
கிரிக்கெட்

ISPL T10: முதல் போட்டியிலே ’சென்னை சிங்கம்ஸ் அணி’ த்ரில் வெற்றி.. உற்சாகத்தில் நடிகர் சூர்யா!

Prakash J

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. முன்னதாக, இந்தத் தொடரின் தொடக்க விழா நிகழ்வில், சச்சின் டெண்டுல்கர் பந்துவீச, நடிகர் சூர்யா அதை அடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதன்பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மஜ்ஹி மும்பையும் மற்றொரு நட்சத்திரமான அக்‌ஷய் குமாரின் ஸ்ரீநகர் கே வீர் அணியும் நேற்று முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஸ்ரீநகர் அணி அதே 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் இத்தொடரில் 2வது போட்டியில், நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும், சாயிஃப் அலிகானின் டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தாவும் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சாகர் அலி என்பவர் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை அணி 8 ரன்களில் த்ரில் வெற்றியைப் பெற்றது. சென்னை அணியில் ஆர்.தாவித் குமார் 2 ஓவர்கள் வீசி 13 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை அறுவடை செய்தார். ஐஎஸ்பிஎல் தொடரில், தாம் சந்தித்த முதல் போட்டியிலேயே நடிகர் சூர்யாவின் அணி வெற்றி பெற்றிருப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.