பிசிசிஐ, ஐபிஎல் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

IPL 2026 | பயிற்சிக்கே கெடுபிடி.. 10 அணிகளுக்கும் புது ரூல்ஸ் போட்ட பிசிசிஐ!

ஐபிஎல் 2026 சீசன் விரைவில் தொடங்கப் போவதை முன்னிட்டு அனைத்து அணிகளுக்கும் புதிய பயிற்சி வழிகாட்டுதல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Prakash J

ஐபிஎல் 2026 19ஆவது சீசன், மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அனைத்து அணிகளுக்கும் புதிய பயிற்சி வழிகாட்டுதல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஓர் அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறிவிடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் 2026 19ஆவது சீசனுக்கான முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 28ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி, ஹைதராபாத் அணியை சின்னசாமி மைதானத்தில் சந்திக்கிறது. அதேநேரத்தில், போட்டி தொடங்குவதற்கு முன்பே அனைத்து அணிகளும் ஏற்கெனவே தங்கள் பயிற்சி முகாம்களைத் தொடங்கிவிட்டன. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடிய வீரர்கள் விரைவில் தங்கள் அணிகளுடன் இணைந்து, வரவிருக்கும் தொடருக்கான பயிற்சியைத் தொடங்க உள்ளனர். இந்த நிலையில், புதிய ஐபிஎல் 2026 பயிற்சி வழிகாட்டுதல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி,

சின்னசாமி ஸ்டேடியம்
  • ஓர் அணி பயிற்சி செய்து முடித்த ஆடுகளத்திலோ அல்லது வலைப்பயிற்சி இடத்திலோ மற்றோர் அணி பயிற்சி செய்யக் கூடாது.

  • ஒவ்வோர் அணியின் பயிற்சிக்கும் புதிய ஆடுகளங்கள் தயார் செய்யப்பட வேண்டும்.

  • இரண்டு அணிகள் அடுத்தடுத்தோ அல்லது ஒரே நேரத்திலோ பயிற்சி மேற்கொண்டாலும், அவர்களுக்குத் தனித்தனி வலைகள் ஒதுக்கப்பட வேண்டும்.

  • ஓர் அணி தனது பயிற்சியை முன்கூட்டியே முடித்துவிட்டாலும், அந்த இடத்தை அடுத்த அணி பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறிவிடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி போட்டிகளை நடத்துவதற்கும் பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒவ்வோர் அணியும் இந்த சீசனில் அதிகபட்சமாக இரண்டு பயிற்சிப் போட்டிகளை மட்டுமே விளையாட முடியும். அதற்கும் பிசிசிஐயின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்.

இந்தப் போட்டிகள் முக்கிய ஆடுகளத்தில் இல்லாமல், மைதானத்தின் ஓரத்தில் உள்ள பக்கவாட்டு ஆடுகளங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஒளியில் பயிற்சிப் போட்டிகளை நடத்தினால், அது மூன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

csk

தவிர, மைதானத்தின் முக்கிய ஆடுகளத்தைப் போட்டிக்காகத் தயார் செய்யும் பணிகளுக்காக, உள்ளூர் அணியின் முதல் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நான்கு நாட்களில் அந்த மைய ஆடுகளத்தில் எந்தப் பயிற்சியும் அல்லது பயிற்சிப் போட்டியும் நடத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் அணிக்குப் பயிற்சி தேவைப்பட்டால், மாநில கிரிக்கெட் சங்கம் மாற்று மைதானத்தை இலவசமாக ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும், பயிற்சி நேரத்தைப் பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளும் ஒரே நேரத்தைக் கேட்டால், அணி மேலாளர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும், அவர்களால் சுமுகமான முடிவை எட்ட முடியாவிட்டால், பிசிசிஐ தலையிட்டு இரு அணிகளுக்கும் நேரத்தைச் சமமாகப் பிரித்து வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, மார்ச் 16ஆம் தேதி முதல், அணிகளுக்கு இரண்டு பயிற்சி வலைகளும், பந்துகளை அதிரடியாக அடித்துப் பழகுவதற்கான ஒரு பிரத்யேக ஆடுகளமும் மைதானத்தின் ஓரத்தில் ஒதுக்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.