Model Image ChatGpt
கிரிக்கெட்

உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் | கடுமையான புதிய விதிகளை அமல்படுத்திய பிசிசிஐ!

புதிய விதியின் கீழ், திட்டமிட்டு நோ-பால்களை வீசியதாகக் கண்டறியப்படும் பந்துவீச்சாளர், அந்தப் போட்டியின் மீதமுள்ள பகுதி முழுவதும் விளையாட தடை செய்யப்படுவார்.

Prakash J

2026-27ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் சீசனுக்கான விளையாடும் விதிகளில் பல முக்கிய மாற்றங்களை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதியின் கீழ், திட்டமிட்டு நோ-பால்களை வீசியதாகக் கண்டறியப்படும் பந்துவீச்சாளர், அந்தப் போட்டியின் மீதமுள்ள பகுதி முழுவதும் விளையாட தடை செய்யப்படுவார்.

நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வரும் கிரிக்கெட் தொடர் வடிவங்களுக்கு மத்தியில், அதன் விதிமுறைகளும் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-27ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் சீசனுக்கான விளையாடும் விதிகளில் பல முக்கிய மாற்றங்களை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் திட்டமிட்டு வீசப்படும் ஃபிரண்ட்-ஃபுட் நோ-பால்கள் அல்லது பிட்ச் ஆகாமல் நேரடியாக வரும் பந்துகளுக்குக் கடுமையான தண்டனை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கடைசி இன்னிங்ஸை விட்டுக்கொடுப்பதற்கான தடை உள்ளிட்ட பல மாற்றங்கள் அடங்கும். புதிய விதியின் கீழ், திட்டமிட்டு நோ-பால்களை வீசியதாகக் கண்டறியப்படும் பந்துவீச்சாளர், அந்தப் போட்டியின் மீதமுள்ள பகுதி முழுவதும் விளையாட தடை செய்யப்படுவார்.

bcci

இதற்குமுன்பு, குறிப்பிட்ட காலகட்டம் வரை அந்த இன்னிங்ஸில் மட்டுமே பந்துவீச அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு பந்து திட்டமிட்டு வீசப்பட்டதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கள நடுவர்களுக்கே இருக்கும். மற்றொரு முக்கிய மாற்றம், இனிமேல் ஆட்ட நேரத்தின் கடைசி ஓவரில் விக்கெட் விழுந்தாலும், அந்த ஓவர் முழுமையாக வீசி முடிக்கப்பட வேண்டும். முந்தைய விதியின்படி, ஓவர் முடிவதற்குள் விக்கெட் விழுந்தால், புதிய பேட்ஸ்மேன் களமிறங்குவதற்கு கூடுதல் நேரம் ஆகும் என்பதால் அன்றைய ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்படும்.

மேலும், அணிகள் இனி ஒரு போட்டியின் கடைசி இன்னிங்ஸை டிக்ளேர் செய்யவோ அல்லது விளையாடாமல் அப்படியே விட்டுக்கொடுக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது. போட்டிகளின் முடிவுகளைத் தங்களுக்கு சாதகமாகத் திட்டமிட்டு மாற்றுவதற்கு இந்த விதி பயன்படுத்தப்படலாம் என்ற கவலை எழுந்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், சர்வதேச விளையாட்டு விதிகளில் இருப்பதுபோல் டிரிங்ஸ் இடைவேளையின்போது தலைமைப் பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், விக்கெட் கீப்பர்கள் பந்து வீசப்படும் தருணத்தில் மட்டுமே தங்களது கையுறைகளை ஸ்டம்புகளுக்கு பின்னால் வைத்திருக்க வேண்டும். இதற்குமுன்பு, பந்துவீச்சாளர் தனது ரன்-அப்பைத் தொடங்கும் போதிலிருந்தே விக்கெட் கீப்பர்கள் தங்களது கையுறைகளை ஸ்டம்புகளுக்கு பின்னால் வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

BCCI

இந்த திருத்தப்பட்ட விதிகள் அடுத்த மாதம் துலீப் டிராபியுடன் தொடங்கவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் சீசன் முதல் அமலுக்கு வரவுள்ளன. பிசிசிஐ இந்த புதிய விதி மாற்றங்களை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கிரிக்கெட் சட்டங்களை உருவாக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) கொண்டு வந்த விதிகளின் அங்கீகாரமாகவே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஐபிஎல்லுக்கு என சில விதிகள் இருப்பதால், அத்துடன் இதுவும் சேர்க்கப்படுமா எனத் தெரியவில்லை.