வைபவ் சூர்யவன்ஷி ani
கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷிக்கு குறி.. கண்காணிக்கும் பிசிசிஐ.. களமிறக்கப்பட்ட லக்‌ஷ்மண்!

“சச்சின் டெண்டுல்கரைப்போல வைபவ் சூர்யவன்ஷியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என பிசிசிஐ தெரிவித்திருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Prakash J

ஐபிஎல் மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் தொடரிலும் அவர் இடம்பெற்றுள்ளார். அதேநேரத்தில், அவருக்கு தொடர்ந்து அழுத்தம் தரக்கூடாது என கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டுள்ள பிசிசிஐ, தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளது. பிசிசிஐ சார்பில் மும்பையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் ஒன்றில், அதன் செயலாளர் தேவஜித் சாய்கியா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில், டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பிசிசிஐ சிறப்பு மைய தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

vaibhav sooryavanshi

இந்தக் கூட்டத்திற்குப் பின் பேசிய தேவஜித் சாய்கியா, "சச்சின் டெண்டுல்கர் நாட்டிற்காக ஆற்றிய சேவையைப் போலவோ அல்லது கடந்த காலத்தில் ஜாம்பவான்களாக மாறிய மற்ற வீரர்களைப் போலவோ, வைபவ் சூர்யவன்ஷி அல்லது அவரது தகுதிக்கு இணையான எந்தவொரு வீரரும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனவே, நாங்கள் வைபவ் விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். அவர் தனது சர்வதேச வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், எல்லா கோணங்களிலிருந்தும் கண்காணிக்கப்படுகிறார். பிசிசி அவரது எதிர்காலத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அவர் முன்னோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு சரியான அடியிலும் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

அவர் ஒரே ஒரு தொடரிலோ அல்லது ஓர் ஆண்டிலோ மட்டும் மின்னும் வீரராக மாறிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம். வைபவின் முக்கியத்துவத்தை மட்டுமல்ல, நாங்கள் அனைத்து வீரர்களையும் கவனித்து வருகிறோம். எங்கள் இலக்குக் குழுவில் சுமார் 10-15 வீரர்கள் உள்ளனர். எங்கள் COE தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் அவர்களின் எதிர்காலம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரையும் படிக்க: நிறம் மாறும் சினிமா - 7 | அண்ணா – கலைத்துறையில் தம்பிகளை உருவாக்கிய தளபதி!