பரோடா அணி pt web
கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி கோப்பை | ‘எப்புட்றா..’ 20 ஓவர்களில் 349 ரன்கள்.. உலக சாதனை படைத்த பரோடா அணி!

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சிக்கிம் அணிக்கு எதிராக பரோடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 349 ரன்களைக் குவித்து சாதனைபடைத்துள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும்.

அங்கேஷ்வர்

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் குரூப் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று நடக்கும் 111 ஆவது லீக் போட்டியில் சிக்கிம் அணியும் பரோடா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களத்திற்கு வந்ததில் இருந்தே சஸ்வத் ராவத் மற்றும் அபிமன்யுசிங் ராஜ்புத் இணைந்து சிக்கிம் அணியை உண்டு இல்லை என்றாக்கினர். 2.4 ஓவர்களிலேயா பரோடா அணியை 50 ரன்களைக் கடக்கச் செய்தனர். சஷ்வத் ராவத் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசி 43 ரன்களைக் குவிக்க, அபிமன்யு சிங் ராஜ்புத் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிகசர்களை விளாசி 53 ரன்களைக் குவித்தார்.

மூன்றாவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்த பானு பனியா சிக்கிம் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் 15 சிக்சர்களை விளாசி 134 ரன்களைக் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். 10.5 ஓவர்களிலேயே பரோடா அணி 200 ரன்களைக் கடந்தது.

பின் வந்த ஷிவாலிக் ஷர்மா, விஷ்னு சோலான்கி முறையே 17 மற்றும் 16 பந்துகளில் தலா 6 சிக்சர்களை விளாசி அரைசதம் கடந்திருந்தனர். 17.2 ஓவர்களிலேயே 300 ரன்களைக் கடந்த பரோடா அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 349 ரன்களைக் குவித்தது. இதுவே, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக, நைரோபியில் காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்களை இழந்து 344 ரன்களைக் குவித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

ஹர்திக் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிக்கிம் பயன்படுத்திய 7 பந்துவீச்சாளர்களில் 4 பேர் ஓவருக்கு 20 ரன்களுக்கும் மேலாக வாரி வழங்கினர்.

பின்னர் 350 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சிக்கிம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் பரோடா அணி 264 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.