மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல் Cricinfo
கிரிக்கெட்

"Night Pub"-லிருந்து ஆம்புலன்சில் அழைத்துச்செல்லப்பட்ட மேக்ஸ்வெல்! மது அருந்தியது காரணமா? விசாரணை!

Rishan Vengai

ஆஸ்திரேலியா வீரர் க்ளென் மேக்ஸ்வெல் விபத்தில் சிக்குவதும், தன்னை காயப்படுத்திக்கொள்வதும் புதிய விசயமில்லை. அவர் கடந்த இரண்டு வருடங்களாகவே அதிகப்படியான விபத்துகள் மற்றும் காயங்களால் நீண்ட ஓய்வில் தொடர்ச்சியாக இருந்துவருகிறார்.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பையின் போது, ஒரு நண்பரின் வீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர் கீழேவிழுந்து காலில் பயங்கர எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேபோல கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போதும் கூட, கோல்ஃப் விளையாட சென்ற அவர் கோல்ஃப் வண்டியில் இருந்து விழுந்து மூளையதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில்தான், தற்போது மீண்டும் ஒரு இரவுநேர பப் (pub) நிகழ்வில் கலந்துகொண்ட போது, எதோ விபத்து ஏற்பட்டு க்ளென் மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அது தற்போது தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரவுநேர பப் நிகழ்விற்கு பின் மருத்துவனையில் அனுமதி!

7NEWS வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, “கடந்த வெள்ளிக்கிழமை அடிலெய்டில் நடந்த இரவுநேர பப் நிகழ்வில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல், பிர்ட்லீயின் சிக்ஸ் அண்ட் அவுட் நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென மேக்ஸ்வேல் ராயல் அடிலெய்ட் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்ட அவர் அன்றைய இரவே மருத்துவமனையில் இருந்து கிளம்பியதாகவும், தற்போது குணமடைந்து வருவதாகவும்” செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து தற்போது தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், ஆஸ்திரேலியா நிர்வாகம் விபத்தின் உண்மைநிலை குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அன்றைய இரவு என்ன நடந்தது என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை.

Glenn Maxwell

இந்நிலையில் மேக்ஸ்வெல் மது அருந்தியிருந்ததால் தான் இந்த நிகழ்வு நடந்ததாகவும், அதனால் தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் பெயர் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேக்ஸ்வெல்லின் பணிச்சுமை காரணமாகவே ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் டி20 அணியில் இடம்பெறுவார் என தெரிவித்துள்ளது. விபத்தின் உண்மைநிலை குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.