பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவை இரண்டாவது இன்னிங்ஸில் 88/6 என்ற நிலைமையில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டியில் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. தொடரை இழந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்ற கரையையாவது இங்கிலாந்து நீக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
இந்நிலையில் தான் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் நடந்துவருகிறது.
பரபரப்பாக தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி வெறும் 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியும் வெறும் 110 ரன்களில் சுருண்டு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் மைக்கேல் நெசெர் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதிகபட்சமாக இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் சேர்த்தார்.
முதல் நாள் முடிவில் 20 விக்கெட்டுகள் பறிபோன நிலையில், 42 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா அணி. இந்தசூழலில் இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 88 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது. பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோஷ் டங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.