ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
17வது ஆசியக் கோப்பை தொடரானது துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் முதலிய 8 அணிகள் இரண்டு குழுக்களாக லீக் போட்டிகளில் விளையாடிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன. இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடரில் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று சூப்பர் 4 பிரிவில் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மாவும், சுப்மன் கில்லும் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். அபிஷேக் 74 ரன்னிலும், சுப்மன் 47 ரன்னிலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினாலும், பின்னர் களமிறங்கிய திலக் வர்மா (30* ரன்கள்), சஞ்சு சாம்சன் (13), ஹர்திக் பாண்டியா (7* ரன்கள்) ஆகியோரின் பங்களிப்புடன் இந்திய அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம், சூப்பர் 4 சுற்றிலும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வாகை சூடியது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தப் போட்டியின் இறுதியிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றனர். முன்னதாக லீக் சுற்றில் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய அணியினர் கைகுலுக்காமல் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக பாகி. அணி, ஐசிசியிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.