virat kohli - ashwin web
கிரிக்கெட்

”விராட் கோலிக்கு கிரீடம் சூட்டணும்..” இன்னும் 2 வருடங்கள் விளையாடி இருக்கலாம்! - புகழ்ந்த அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்த்தெடுத்த விராட் கோலிக்கு பெரிய கிரீடத்தை சூட்டவேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழ்ந்துள்ளார்.

Rishan Vengai

டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருப்பது பல உலக கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. 36 வயதாகும் விராட் கோலி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகாலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியிருக்கலாம் என்பதே எல்லோருடைய ஆதங்கமாகவும் இருந்துவருகிறது.

விராட் கோலி இந்தியாவுக்காக மொத்தம் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 7 இரட்டைச் சதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 254 ஆகும்.

rohit - kohli

2024 டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தபிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து கூட்டாக ஓய்வை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதேபோல், இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய நேர்காணல்களில் கூட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த விரும்புவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அவர்களுடைய ஓய்வு அறிவிப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலிக்கு கிரீடம் சூட்டணும்..

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்திருப்பது அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டு பேரின் டெஸ்ட் கிரிக்கெட் குறித்தும் புகழ்ந்து பேசினார்.

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டின் எப்போதைக்குமான சிறந்த கேப்டன் என்று புகழாரம் சூட்டினார்.

விராட் கோலி குறித்து பேசியிருக்கும் அவர், “இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் என்றால் அது விராட் கோலி தான், விராட் கோலிக்கு கிரீடம் சூட்டவேண்டுமா என்ற கேள்வியே எழுப்பக்கூடாது, அவர் அனைத்திற்கும் தகுதியானவர். இந்திய கிரிக்கெட் அறிமுகப்படுத்தியதிலேயே எப்போதைக்குமான சிறந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தான். என்னை பொறுத்தவரை விராட் கோலி இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்கலாம்.

விராட் கோலி

களத்தில் அவர் எடுத்துவரும் எனர்ஜியை, இனி யாரால் எடுத்துவர முடியும் என்று யோசித்தால் அது மிகவும் கடினமான விசயம். பேட்டிங், கேப்டன்சியை கடந்து அவர் 5 நாள் ஆட்டமான டெஸ்ட் போட்டியில் எப்போதுமே ஒரு எனர்ஜியுடன் இருப்பார், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் அவருடைய அற்புதமான ஃபீல்டிங்கின் மூலம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஜோ ரூட்டை ரன் அவுட் மூலம் வெளியேற்றுவார். அதில் 2 ரன்கள் நிச்சயம் இருந்தது, ஆனால் அந்த பந்தில் விக்கெட்டை எடுத்துவர முடியும் என்றால் அது விராட் கோலியால் மட்டும் தான் முடியும்.

virat kohli

சில நேரங்களில் எல்லாம் இவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறாயே என்ன சாப்பிட்டுவிட்டு வருவாய் என்று கேட்க தோன்றும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஏற்படுத்தியிருக்கும் லெகஸியை யார் நிரப்ப போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கப்போகிறது. அதை யார் நிரப்பினாலும் அவர்களுக்கு என்னுடைய பெரிய சல்யூட். இந்திய கிரிக்கெட்டுக்கும், கவுதம் கம்பீர் எராவிற்கும் உண்மையான சவால் இதற்குமேல் தான் தொடரப்போகிறது” என்று பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.