najibullah zadran - virat kohli
najibullah zadran - virat kohli IPL
கிரிக்கெட்

RCB-க்காக விளையாடி, கோலியை கோப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதே ஆசை! - ஆப்கான் வீரர் ஜத்ரான் விருப்பம்

Rishan Vengai

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான நஜிபுல்லா ஜத்ரான், வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் ரூ.50 லட்சத்திற்கு தன்னுடைய பெயரை இணைத்துள்ளார். தன்னுடைய முதல் ஐபிஎல் வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியில் இணைய வேண்டும் என்ற தெளிவான இலக்கை மனதில் கொண்டு தயாராகி வருகிறார். ஆர்சிபி அணிக்காக விளையாடி, விராட் கோலியை அவருடைய முதல் ஐபிஎல் பட்டத்தைப் பெறுவதற்கு உதவுவேண்டுவதே தனது ஆசை என தெரிவித்துள்ளார்.

virat kohli

அதிரடிக்கு பெயர் போன ஒரு இடதுகை பேட்ஸ்மேன் நஜிபுல்லா ஜத்ரான், டி20 கிரிக்கெட்டில் ஈர்க்கக்கூடிய ரன்களை வைத்துள்ளார். 94 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 140 ஸ்டிரைக் ரேட்டில் 31 சராசரியுடன் 1712 ரன்களை குவித்துள்ளார். இதில் 8 டி20 அரைசதங்களும் அடங்கும். ஐபிஎல் 2024 ஏலத்திற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், ​​ஆர்சிபி ஜெர்சியை அணிந்து கோலியின் கோப்பை தேடலுக்கு பங்களிக்க வேண்டும் என்ற தனது லட்சியத்தில் ஜத்ரான் உறுதியாக இருக்கிறார்.

கோப்பை வெல்லவில்லை என்ற ஆர்சிபி நிலையை மாற்ற வேண்டும்! - ஜத்ரான்

ஆர்சிபி அணி பல உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்டிருந்தாலும், ஐபிஎல் பட்டத்தை ஒருபோதும் கைப்பற்றாத ஒரு துரதிர்ஷ்டவசமான பக்கமாகவே இருந்துவருகிறது. 2016ஆம் ஆண்டு ஒரு வெற்றிகரமான ஐபிஎல்லை கொண்டிருந்தாலும், கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ​சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது ஆர்சிபி. அதற்கு பிறகு அந்த அணி இறுதிப்போட்டியை எட்டாத நிலையில், 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டு பிளெசிஸ் தலைமையில் களமிறங்க தயாராக உள்ளது.

najibullah zadran

இந்நிலையில் ஐபிஎல் கோப்பை வெல்லும் ஆர்சிபி அணியில் இருக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் ஜத்ரான், “ஒவ்வொரு வீரரையும் போலவே, நானும் ஐபிஎல்லில் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன். நடக்கவிருக்கும் 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சேர விரும்புகிறேன். விராட் கோலி இன்னும் ஐபிஎல் வெற்றியைப் பெறவில்லை, இந்த முறை ஒன்றாக இணைந்து அதை மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

najibullah zadran

2024 ஐபிஎல் தொடர் ஆர்சிபி அணிக்கு ஒரு பிரகாசமான தொடராகவே இருக்கப்போகிறது. ஏனென்றால் அந்த அணியில் விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ஃபாப் டு பிளெசிஸ், ரஜத் பட்டிதார், காம்ரான் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் முதலிய டாப் 6 வீரர்கள் தங்களுடைய சிறந்த ஃபார்மில் இருக்கின்றனர். மேலும் பந்துவீச்சில் முகமது சிராஜ் மற்றும் ரீஸ் டாப்லி இருவரும் கலக்க காத்திருக்கின்றனர். இந்தவருடம் MI எமிரேட்ஸ் அணிக்காக விளையாடியிருந்த நஜிபுல்லா ஜத்ரான் நல்ல ஃபினிஸிங் கிரிக்கெட் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.