டெல்லியில் நடைபெறும் இந்தியா-ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது ஆட்டத்தில், ஹோஸ்ட் அணியாக விளையாடும் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 159 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ரசீத் கான், முகமது நபி ஆகியோரின் அதிரடி ஆட்டம் அணியை காப்பாற்றியது. இந்தியா வெற்றிக்காக 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய மண்ணிலேயே இந்திய அணி வெளிநாட்டு அணியாக விளையாடுகிறது. அதாவது, இந்தத் தொடர் டெல்லியில் நடைபெற்றாலும், அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் அணிதான் போட்டியை நடத்தும் 'ஹோஸ்ட்' அணியாக செயல்படுகிறது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி தொடங்கியது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறிய போது கடைசியாக வந்து அதிரடியாக விளையாடிய ரசீத் கான் மற்றும் முகமது நபி இருவரும் அணியை நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றனர்.
160 ரன்கள் அடித்தால் வெற்றி என இந்திய அணி விளையாடிவருகிறது.
இந்தப்போட்டியில் 20 ரன்கள் அடித்த முகமது நபி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 4வது உலக வீரராக வரலாறு படைத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் + 100 விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்:
* ஷகிப் அல் ஹசன் - 2551 ரன்கள், 149 விக்கெட்டுகள்
* சிக்கந்தர் ராசா - 3244 ரன்கள், 114 விக்கெட்டுகள்
* விரந்தீப் சிங் - 3402 ரன்கள், 126 விக்கெட்டுகள்
* முகமது நபி - 2501 ரன்கள், 111 விக்கெட்டுகள்
இன்றைய போட்டியில் முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசிய ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச டி20 போட்டிகளில் டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு இடையே அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளராக சாதனை படைத்தார். இதுவரை 13 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார் பும்ரா.