விளையாட்டு

“விராட் கோலி போன்று வேகமானவர் பாபர் அசாம்” - கிராண்ட் பிளாவர்

rajakannan

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இந்தியாவின் விராட் கோலி போன்றவர் என்று கிராண்ட் பிளாவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

அதிலும், நேற்றைய வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் தோல்வியையே சந்திக்காத நியூசிலாந்து அணிக்கு பாகிஸ்தான் நேற்று முதல் தோல்வியை அளித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம். அவர் நேற்று 101 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் 6 போட்டிகளில் விளையாடி 333 ரன்களுடன் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். இவர் மொத்த ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். நிலைத்து நின்று விளையாடி வெற்றிக்கு வழிவகுக்கிறார்.

இந்நிலையில், ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான கிராண்ட் பிளாவர், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார். “அவர் சிறப்பான வீரர். பாகிஸ்தான் அணி இதுவரை பார்க்காத சிறந்த வீரராக அவர் உருவெடுப்பார். அவர் மிகுந்த தாகத்துடன் இருக்கிறார். இளமையாகவும், தகுந்த உடற்தகுதியுடனும் இருக்கிறார். இதேபோன்று அவர் தொடர்ந்து சிறப்பான விளையாடினால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. விராட் கோலியை போன்று அவரிடம் வேகம் உள்ளது” என்று பிளாவர் கூறினார்.