விளையாட்டு

மைதானத்துக்கு ரயிலில் சென்ற இங்கி. கிரிக்கெட் வீரர்கள்

webteam

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ரயிலில் பயணித்து மைதானத்துக்கு சென்றனர். 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்துக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்ட கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து வீரர்கள், பிரத்யேக பேருந்தைத் தவிர்த்தனர். அவர்கள் பேங்க் ரயில் நிலையத்தில் இருந்து கென்னிங்டன் ரயில் நிலையத்துக்கு சுரங்க ரயில் மூலம் பயணித்து மைதானத்தை அடைந்தனர். ரயிலில் பயணித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு, ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கென்னிங்டன் ஓவலில் நடக்கும் 100ஆவது டெஸ்ட் போட்டி என்ற பெருமையை இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா இடையிலான 3ஆவது டெஸ்ட் அமைந்துள்ளது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணியை 175 ரன்களில் சுருட்டியது. அறிமுக வீரர் டாபி ரோலண்ட் ஜோன்ஸ் 5 விக்கெட்டுகள் உதவியுடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள் முன்னிலை பெற்றது.