விளையாட்டு

''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!

webteam

விராட் கோலி தன்னுடைய கையில் கோப்பையைக் கொடுத்ததும் கண் கலங்கிவிட்டேன் என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார்

ஆஸ்திரேலியா தொடரை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு சேலம் சின்னப்பம்பட்டியில் பொதுமக்கள் ஒன்றுகூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் குறித்து இன்று நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

“ஐபிஎல் போட்டியில் விளையாடியது பெரிய உதவியாக இருந்தது. என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டுமென்று இருந்தேன். எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. கடின உழைப்பே என் வெற்றிக்கு காரணம். கடினமாக உழைத்தால் அதற்காக பலன் கிடைக்காமல் போகாது. அதனை என் வாழ்வில் பார்த்துள்ளேன்.தமிழக மக்கள் எனக்கு பெரிய ஆதரவு கொடுத்தனர்.

அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. விராட் கோலி என் கையில் கோப்பையைக் கொடுத்ததும் நான் கண் கலங்கிவிட்டேன். ஆஸ்திரேலியா அணி வீரர் வார்னர் எனக்கு முழுமையான ஆதரவு அளித்தார். பாராட்டினார். என்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது எனக்கு கனவு போல இருந்தது. இந்தியாவின் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் உறுதுணையாக இருந்தனர். ஆஸ்திரேலியா மண்ணில் கைகளில் கோப்பையை ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார் நடராஜன்.