விளையாட்டு

டி20 போட்டியில் 23 டாட் பந்துகள்: அசத்திய பாகிஸ்தான் வீரர் சாதனை!

webteam

டி20 போட்டியில் நான்கு ஓவர்களில் 23 டாட் பந்துகளை வீசி 2 விக்கெட் எடுத்து பாகிஸ்தான் வீரர் சாதனைப் படத்துள்ளார்.

இந்தியாவின் ஐபிஎல் போல, வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக், டி20 தொடர் நடந்து வருகிறது. இதிலும் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகிறன்றனர். இன்று நடந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணியும் கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக, ஹோல்டர் 35 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். 

பின்னர் களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பிராண்டன் கிங் 49 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக பார்படாஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான் (பாகிஸ்தான்), 4 ஓவர்களில், அதாவது 24 பந்துகளை வீசி 23 டாட் பந்துகளுடன் 2 விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைத்தார். இது, டி20 வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாகும். இருந்தாலும் அவர் அணி தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகன் விருது இர்பானுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் இர்பான் கூறும்போது, ‘டி20 போட்டி வரலாற்றில் சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அணி தோற்றதில் வருத்த ம்தான். இந்த பிட்ச்சில் பந்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. அதுக்கு காரணம் என் உயரம். திருப்தியான ஆட்டமாக இன்றைய போட்டி இருந்தது’ என்றார்.