விளையாட்டு

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி

webteam

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தபீக் உமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் டெஸ்ட் கிரிக்கெட் வரிசையில் உமர் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். அவர் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2006 - 2010 க்கு இடையில் அவர் அணியில் அங்கம் வகிக்கவில்லை என்றாலும், 2001 ஆம் ஆண்டில் அவர் முக்கிய அங்கமாக திகழ்ந்தார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடியுள்ளார். உமர் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியை 2014 ஆம் ஆண்டு விளையாடினார்.

பின்பு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றார். இந்நிலையில் இடதுகை ஆட்டக்காரரான தபீக் உமருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மஜீத் ஹக் (ஸ்காட்லாந்து), ஜாபர் சர்பராஸ் (பாகிஸ்தான்) மற்றும் சோலோ ந்க்வேனி (தென்னாப்பிரிக்கா) ஆகியோருக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நான்காவது கிரிக்கெட் வீரர் உமர் ஆவார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நேற்று இரவு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் என்னை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. எனக்கு கடுமையான அறிகுறிகள் இல்லை. எனவே நான் என்னை வீட்டில் தனிமை படுத்தி உள்ளேன். நான் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.