டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வண்டன் அலங்கார் சவாய் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி, Chess.com நடத்திய Titled Tuesday Blitz என்ற வாரந்திர ஆன்லைன் போட்டியில் கலந்துகொண்டார். இந்த தொடரின் இரண்வாது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சென் - ஐ எதிர்கொண்டுள்ளார்.
கார்ல்சனின் ரேட்டிங் 2,823. அதே நேரத்தில், வண்டனின் FIDE கிளாசிக்கல் ரேட்டிங் 2,288 மட்டுமே இருக்கும் நிலையில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய வண்டன், தனது வழக்கமான e4 நகர்வுடன் ஆட்டத்தை தொடங்கினார். சுமார் 50 நகர்வுகள் நடைபெற்ற இந்த போட்டியில், 26 வது நகர்த்தலின் போது, கார்ல்சனின் தவறை சரியாகப் பயன்படுத்தி வண்டன் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.
ஆனால், இந்த வெற்றியின் சுவாரஸ்யமான விஷயம் வேறு!
உலகின் மிகச்சிறந்த செஸ் வீரரை வீழ்த்திய பிறகும், வண்டன் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. போட்டி முடிந்ததும் தனது பெற்றோரிடம்கூட உடனடியாக சொல்லாமல், சாதாரணமாக தூங்கச் சென்றுவிட்டார். அடுத்த நாள் Chess.com-ல் ஆட்டத்தைப் பார்த்தபோதுதான், வண்டனின் தந்தைக்கு தனது மகன் கார்ல்சனை வீழ்த்தியது தெரியவந்துள்ளது. மேலும், இந்தப் போட்டியில் பங்கேற்க வண்டன் முதலில் தயக்கம் காட்டியதாகவும், பெற்றோர்தான் அவரை விளையாடச் சொல்லியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை, பெறுவதற்கு எல்லாமே இருந்தது” என்ற மனநிலையுடன் விளையாடியதாக வண்டன் கூறியிருக்கிறார். 15 வயதிலேயே உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தியிருக்கும் வண்டன் சவாயின் இந்த வெற்றி, இந்திய செஸ் உலகில் கவனம் பெற்றியிருக்கிறது.