2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை முன்னிட்டு தற்போது அணியில் 5 வீரர்களை சென்னை அணி விடுவித்திருக்கிறது.
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. ஏலத்துக்கு முன் 8 அணிகளும் தங்கள் வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். வீரர்களை விடுவித்துக் கொள்ளலாம். இதைத்தொடர்ந்து அணியிலிருந்து விடுவிக்கப்படும் 5 வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 5 வீரர்களின் பெயர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் சைதன்யா பிஷ்நோய், சாம் பில்லிங்ஸ், துருவ் சோரே, டேவிட் வில்லே, மோகித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனுடன் தங்கள் கைவசம் இருக்கும் அணிக்கான தொகை எவ்வளவு என்பதையும் சென்னை அணி அறிவித்திருக்கிறது.
அதன்படி, கடந்த ஆண்டு வீரர்களை விலைக்கு வாங்கியது போக மீதம் ரூ.3.2 கோடி கையிருப்பு இருக்கிறது. தற்போது அணியில் இருக்கும் சில வீரர்களை விடுவித்ததன் மூலம் ரூ.8.4 கோடி வந்திருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு ஏலத்திற்காக ரூ.3 கோடி அணியின் தொகையில் சேர்ந்துள்ளது. இதையெல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.14.6 கோடி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கையிருப்பில் உள்ளது.