விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை - கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை!

jagadeesh

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை - கேரளா அணிகள் மோதுகின்றன.

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. அதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. தனது முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி இருந்த சென்னை அணி 2-வது வெற்றியை நோக்கி களம் இறங்குகிறது.

இந்நிலையில் நேற்றைய பெங்களூரு ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. கோவாவில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

கோவாவுடனான முதல் போட்டி டிரா ஆன நிலையில், பெங்களூரு அணி பலம் குறைந்த ஹைதராபாத் அணியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என முயற்சித்தது. எனினும் ஹைதராபாத் அணியின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.