உலகக் கோப்பை போட்டியில், எதிரணிக்கு பெரிய அச்சுறுத்தலாக, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இருப்பார் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா. ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்ததற்கு அவரது பந்து வீச்சும் காரணம். அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டை வீழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்க இருக்கிறார்.
இந்நிலையில், ‘’பும்ராவின் வெற்றி எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை’’ என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘’2015-ம் ஆண்டிலேயே அவரது திறமையையும் போராட்டக் குணத்தையும் கண்டிருக்கிறேன். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை வளர்த்திருக்கிறார். அவர் வெற்றி எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. முன்பே தெரிந்தது தான்.
அவரது வித்தியாசமான, பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத பந்துவீச்சு முறையும், தொடர்ந்து விக்கெட் வீழ்த்தும் திறமை யும் அவரை அபாயகரமான பந்துவீச்சாளராக மாற்றியிருக்கிறது. திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது அவருக் குத் தெரியும். உலகக் கோப்பை போட்டியில் எதிரணிக்கு பெரிய அச்சுறுத்தலாக அவர் இருப்பார். அவர் இந்தியாவின் சொத்து’’ என்றார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ரிஷாப் பன்டையும் சச்சின் பாராட்டியுள்ளார். ’’சர்வதேச கிரிக்கெட்டில் பயமில்லாமல் அவர் பந்தை எதிர்கொள்ளும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது’’ என்றார்.