விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் அரைசதம்; இங்கிலாந்து நிதான ஆட்டம்!

jagadeesh

இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4-ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அரை சதமடித்தார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கிராவ்லியும், சிப்லேவும் களமிறங்கினர். இதில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் முதலில் சிப்லே ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து நிலைத்து நின்று விளையாட முயற்சி செய்த கிராவ்லி 9 ரன்களில் அக்ஸர் படேல் சுழலில் சிக்கி அவுட்டானார். இதனையடுத்து பெரும் பலமாக இருக்கும் கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்து திணறியது. இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 28 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இப்போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஒல்லி போப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். இப்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களுடன் விளையாடி வருகிறது.