விளையாட்டு

ஐபிஎல்-லில் இருந்து நீக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு 4800 கோடி இழப்பீடு–நீதிமன்றம்

ஐபிஎல்-லில் இருந்து நீக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு 4800 கோடி இழப்பீடு–நீதிமன்றம்

Veeramani

ஐ.பி.எல் அணிகளில் இருந்து 2012 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்க்கு, ரூ.4800 கோடி இழப்பீடு வட்டியுடன் வழங்கவேண்டும் என்று  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடங்கியது முதல் போட்டிகளில் பங்கேற்று வந்தது டெக்கான் சார்ஜர்ஸ் அணி. இந்த அணி 2009இல் ஐ.பி.எல் சாம்பியன் பட்டமும் வென்றது. பின்னர் இந்த அணிக்கு ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக பி.சி.சி.ஐக்கு 100 கோடி உத்தரவாத தொகையை செலுத்த முடியாமல் போனது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமம் 2012இல் ரத்துசெய்யப்பட்டது, இதனை எதிர்த்து இந்த அணியின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி சி.கே. தக்கார் தலைமையிலான தனிநபர் தீர்ப்பாயம் விசாரித்துவந்தது.

இப்போது இந்த தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பில் “ டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தற்போதைய மதிப்பு ரூ.4,800 கோடி என மதிப்பிடப்படுகிறது. பி.சி.சி.ஐ எடுத்த முடிவு சட்டவிரோதமானது. எனவே  டெக்கான் சார்ஜர்ஸ்க்கு ரூ.4800 கோடியை வட்டியுடன் வழங்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ மேல்முறையீடு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதேபோன்ற வழக்கில் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 850 கோடி இழப்பீடு வழங்க 2017 ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது, அந்த  தொகையையே பி.சி.சி.ஐ இதுவரை கொச்சி டஸ்கர்ஸ்க்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.