விளையாட்டு

ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்

JustinDurai

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

நிகழாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணியுடன் மும்பையில் மோதுகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிளேஆஃப் சுற்றுகளும், இறுதிப் போட்டியும் நடக்கிறது. மொத்தம் 52 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டி தொடர் மே 30-ம் தேதி நிறைவடைகிறது.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய மைதானங்களில்  நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிற்பகல் போட்டிகள் 3.30 மணிக்கும் இரவு நடைபெறும் போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.