விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு

newspt

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஏற்கெனவே கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.

அதன்படி மார்ச் 4-ம் தேதி நியூசிலாந்தின் டவுராங்காவில் நடைபெறும் முதல் போட்டியில் தொடரை நடத்தும் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள்அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 அன்று ஹாமில்டனில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து மார்ச் 6-ம் தேதி டவுராங்காவில் நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதன்படி, 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக மிதாலி ராஜ், துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துடன், ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி மோதுகிறது. இதிலும் மிதாலி ராஜ் தலைமையிலான அணியே விளையாடும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் & ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி : மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்கூர் தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காத்திருப்பு வீரர்கள்: சப்பினேனி மேகனா, ஏக்தா பிஷ்ட், சிம்ரன் தில் பகதூர்.