உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கும் வேளையில் தன்னுடைய முதுகுவலி குறித்து கவனம் கொள்ள வேண்டும் என்று தோனி கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 12வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றி பெற்று, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தோனி ஒரு போட்டியில் மட்டும் விளையாடவில்லை.
10 போட்டியில் விளையாடி சென்னை அணியில் அதிகபட்சமாக 314 ரன்களை அவர் குவித்துள்ளார். இத்தனைக்கும் இரண்டு போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை. நான்கு போட்டிகளில் நாட் அவுட் ஆகியுள்ளார். அவரது பேட்டிங் சராசரி 104.66. பெங்களூர் அணிக்கு எதிராக 48 பந்துகளில் 84 விளாசிய தோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய தோனி, தன்னுடைய முதுகுவலி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது, “உலகக் கோப்பை நெருங்கும் வேளை. எனக்கு முதுகு வலி கொஞ்சம் இருக்கிறது. அது ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால் கவனித்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனெனில், அதுவும் முக்கியம்.
அப்படி எனக்கு முதுகு வலிப்பதாக தோன்றினால், கட்டாயம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வேன். ஆனால், தற்போதைய தருணத்தில் நீங்கள் கொஞ்சம் கவலையோடு சமாளிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் முழு உடற்தகுதிக்காக காத்திருக்க வேண்டுமென்று நினைத்தால், ஒரு போட்டிக்கும் இன்னொரு போட்டிக்கும் நடுவில் 5 வருடம் இடைவெளி உருவாகிவிடும்” என்றார்.
அதாவது முதுகுவலி இருந்தாலும் பெரிய அளவில் ஓய்வு எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது என்பதை தோனி சுட்டிக் காட்டியுள்ளார்.